பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

31 Mar 2019

சோலை ஆசுகவி விருந்து

சோலை ஆசுகவி விருந்து 

- 3௦/௦3/2௦19 பைந்தமிழ்ச் சோலை முகநூற் குழுவில்
இரவு 9மணி முதல் 1௦மணிவரை எழுதப்பட்ட 1௦௦ பாடல்கள்

ஒற்றை இலக்கப் பாடல்கள் பாவலர் மா.வரதராசன் 
இரட்டை இலக்கப் பாடல்கள்  கவிஞர் விவேக்பாரதி 


நிலவுதரு தண்மை நினைவுதனைக் கொல்லக்
கலையழகே வந்தென்னைக் கா

காதல் கிளியே கனிவாய் மலர்ந்துநீ
ஓதாய் எனதுபெயர் ஓர்ந்து

துவர்வாய் செழிப்பில் துவண்டு கிடத்தல்
எவருக்கு வாய்க்கும் இனி

 இனியும் வழியில்லை இன்பக் கிளியே
மனத்தில் துடித்தேன் மருண்டு

மருண்டோடும் மானாய் மலைக்கின்ற கண்கள்
உருள்கின்ற தேர்க்கச்சாம் ஓர்

ஓர்மொழி சொல்வாய் உடனே மனம்தருவேன்
பார்வையி லேனும் பகர்

பகலும் இரவும் பரிதவிக்கச் செய்வாய்
அகலாதே என்னுள் ளிரு.

30 Mar 2019

சோலை மெய்ஞ்ஞான வந்தாதி




சோலை மெய்ஞ்ஞான வந்தாதி

* * * * * * * * * * * * * * * ** * * * * * * ** 
பாடியோர் : 
காப்பும் , இரட்டையிலக்கப் பாடல்களும் பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன்
ஒன்றையிலக்கப் பாடல்களும் நூற்பயனும் 
பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி

         பைந்தமிழ்ச்சோலை முகநூகுழுவில் நேரலையாக ஒன்றரை மணிநேரத்தில் பாடப்பெற்ற 100 பாடல்கள்.

காப்பு
(நேரிசை வெண்பா)
----------
கருத்தோன் முதல்வனே காப்பென நிற்பாய்
கருத்தாவைப் பாடப் புகுந்தோம் - திருத்தாளில்
வந்தணைந்த எங்கள் வழுவா எழுத்தினில்
செந்தமிழைச் செய்க சிறந்து! 


உலகம் முழுமைக்கும் ஒன்றாய் விளங்கும் 
தலைவன் திருப்பாதந் தான்பெறுதல் எக்காலம்? (1)

பெறுதலைத் தானீக்கிப் பேரானந் தத்தில்
உறுதலை யான்பெற் றுருப்படுவ தெக்காலம் (2)

படுகின்ற காயங்கள் பாவங்கள் நீங்கிச்
சுடுகின்ற நல்லிறையைச் சுற்றுவதும் எக்காலம்? ( 3)

சுற்றித் தொடர்ந்தவனைத் தூயவனை மாதவனைப்
பற்றிப் படர்ந்து பணிகுவது மெக்காலம் ( 4)

பணியைம் புலனின் பயனை அறிந்து
துணிந்தென் உடலத்தைத் தூற்றுவது மெக்காலம்? (5)

தூற்றலையும் போற்றலையும் தூய வுளத்தோடு
மாற்றிக் களைந்து மகிழ்வுறுவ தெக்காலம்(6)

மகிழ்ச்சி இறைவன் மலர்ப்பாதம் வேண்டல்
புகழ்ந்தவன் தாளில் புகுவதுமு மெக்காலம்?(7)

புகுந்து மலர்ப்பாதம் போற்றிப் பணிந்து
வெகுதல் வினைநீக்கி மேலுறுத லெக்காலம் (8)

மேலிருக்கும் நாயகனின் மேன்மை நினைத்திந்தத்
தோலிருக்கும் பொய்ச்சிறையைத் தூரவிடல் எக்காலம்? (9)

விடலாய் வினைமிகுத்து மேதினியில் பற்றுகுத்துப்
படலாய்ப் பரமனைப் பாவுதலு மெக்காலம்(10)

பாவி எனையந்தப் பாருக் கிறைவனுவந் 
தாவி இனிமையுற ஆட்கொள்வ தெக்காலம்?(11)

கொள்வதூஉ மன்றிக் கொடுப்பதூஉம் சிந்தையறத்
தெள்ளிறையைத் தேடித் திளைப்பதுவு மெக்காலம்(12)

திளைக்கின்ற இன்பங்கள் தீர்ந்தே அமைதி
முளைக்கின்ற நாதன்தாள் முத்திடுத லெக்காலம்? (13)

முத்தும் மணியும் முகிழ்த்த மலர்க்கரமும்
நத்தாமல் நாதன்றாள் நாடுவது மெக்காலம் ? (14)
/
நாடும் பொருளனைத்தும் நாயகனே என்றுரைத்துக்
கூடும் மனத்தாசை கொன்றிடுதல் எக்காலம்? (15)

இட்டாரைத் தேடி இருட்குழிக்குள் வீழாமல்
பட்டாங்கில் ஈசனைப் பாடுவது மெக்காலம்(16)

பாடும் மொழியனைத்தும் பாரா இறைகொடுத்த
கூடல் எனச்சொல்லிக் கும்பிடுதல் எக்காலம்? (17)

கும்பிட் டொருங்காமல் கூடித் திளைக்காமல்
நம்புமிவ் வாழ்வின் நயப்பறுத்த லெக்காலம்(18)

அறுக்கும் அவாநீங்கி ஆழத்தில் மூழ்கிப்
பொறுத்துத் தவமேற்றுப் பொற்புறுத லெக்காலம்? (19)

பொற்புடைய ஈசன் பொலிவை யுணராத
அற்பத் தனமொழித்து ஆட்படுவ லெக்காலம்(20)

ஆட்கொள்ளும் ஆண்டவன்மேல் ஆசை வளர்ந்தென்றன்
நாட்களைநான் போக்கும் நலம்வருத லெக்காலம்? (21)

வருமுயிர்க ளாவுமிங்கு வாழ்விழத்தல் கண்டும்
திருவிடத்தை நீங்கிச் சிறப்புறுத லெக்காலம் (22)

சிறந்த இறைவனையே சிந்தித்து வாழ்வில்
கறந்தபா லுள்ளத்தைக் கண்டிடுத லெக்காலம்? (23)

கண்டுன் மலர்ப்பாதம் காதலித்து வாழாமல்
உண்டுயிர்த்தல் தீதென் றுணர்வதுவு மெக்காலம் (24)

உணர்ச்சிக் கிரையாகி உள்ளொழிந்து வீழா
திணங்கி யிறையோ டிணைந்திருத்த லெக்காலம்?(25)

இருத்தலும் போதலும் ஈசன் வினையென்று
இருத்தியவன் பாதம் இணைந்திருத்த லெக்காலம்(26)

இருக்கும் நிலையறிந் தின்னும் தெளிந்த
கருத்தை எதிர்பார்த்துக் காத்திருத்த லெக்காலம்?(29)

காத்தலும் ஆக்கலும் காணா தழித்தலும்
ஆத்தம்செய் ஈசனென் றாய்வதுவு மெக்காலம்(30)

அறிவுகளுக் கெல்லாமும் அப்பாலாய் ஆகிச்
செறிந்தவனை என்னுள் தெரிசிப்ப தெக்காலம்?(31)

பல்லூழி வாழ்வேன் பரமன் தனையேத்தி
நல்லூழே என்று நனைவதூஉ மெக்காலம்(32)

 உமையொடு நிற்கும் உயர்ந்தவனை என்னுள் 
அமைந்திடக் கண்டே அதிசயித்தல் எக்காலம்? (33)

அதிசயமே ஈசனருள் ஆகத்தாள் தானும்
விதித்த தெனவறிந்து வீடுறுத லெக்காலம்(34)

வீடும் உறவும் விதியும் எனவாழ்ந்தே
ஓடும் நிலைமை ஒழிந்திடுதல் எக்காலம்?(35)

ஒழியா தெனவெண்ணி ஒழியும்வினை செய்வார்
கழியா நிலைகண்டு கட்டறுத்த லெக்காலம் (36)

கட்டி மனத்தைக் கணக்கிட்டு நானாளும்
ஒற்றை நிலைமை உயர்ந்துவரல் எக்காலம்?(37)

வருமச்சில் சுற்றும் பரிதிவடு நீங்கிப்
பருவொழிதல் கண்டு பதைப்பதுவு மெக்காலம்(38)

பதைபதைக்கும் உள்ளதின் பாடுகளைப் போக்கும்
கதையுணர்ந்து வாழ்வில் கதியடைத லெக்காலம்?(39)

அடைந்தமட் பாண்டம் அழியுநீர் சேர
உடையுமுட லோர்ந்தே உருப்படுவ தெக்காலம் (40)

உருப்படும் நாள்பார்த்தே ஓய்ந்திருக்கா தேநான்
திருப்பணிகள் செய்யும் திணவடைதல் எக்காலம்(41)

திணவுடனே செய்த சிறப்பில் வினையால்
உனையடைத லோர்ந்தே உணர்வுறுத லெக்காலம்(42)

தளையாக்கும் ஆசை தனையுடைத்து ஞான
விளையாட்டை நான்காண வீதிவரல் எக்காலம்?(43)

வீதி தனிலிருந்த மேலாடைப் பெண்வீழ்ந்து
நாதியற நின்றொழிந்த நான்தேற லெக்காலம் (44)

 தேற்றி அழுமென்னைத் தேடி யிறைவந்து 
மாற்றி அருளி மருள்நீக்கல் எக்காலம்?(45)

நீக்கலும் யாவையும் நீக்கலாச் சோதியன்
நோக்கினில் வீழ்ந்து நுரைத்திருப்ப தெக்காலம் (46)

நுரையாய் விழிமறைக்கும் நூதனக் காமம்
விரைந்தோட என்னுள்ளம் வீச்சுறுதல் எக்காலம்? (47)

 வீச்சில் விளையாடி வீணில் வினைசேர
மூச்சடங்கு முன்னே முனைந்திருத்த லெக்காலம் (48)

 முனைந்தென்றன் எண்ணத்தால் முக்தி கொடுக்கும் 
வினையோனைப் பாடி வியத்தலுந்தான் எக்காலம்? (49)

வியக்கின்ற வாழ்வுற்று வீட்டையிழக் கின்றார்
நயந்தவர் நாதன்றாள் நத்துவது மெக்காலம் (50)

துவக்கத்தில் கொண்டிருக்கும் தூய்மையான பக்தி
தவக்காலம் முற்றுலுமே தானிருத்தல் எக்காலம்?(51)

இருக்கின்ற தெல்லாம் இறப்ப தறிந்தும்
செருக்கோ டலைபவர் சீருறுத லெக்காலம்(52)

சீருடையர் மாதர் சிறப்புடையர் என்றெல்லாம்
பேருரைகள் செய்வார் பிழைப்பதுதா னெக்காலம்? (53)

 பிழைக்கின்றா ராயின் பிழைசெய்வார் இல்லென்
றிழைக்கின்ற தீயோர் இணைப்புறுத லெக்காலம்(54)


இணையைக் கடிந்திடுவார் இல்லத்தை நோவார் 
துணையெனக் கோவிலைச் சார்ந்திருப்ப தெக்காலம்? (55)

சார்ந்தும் பணிந்தும் சாகாத வாழ்வுற்றுத்
தேர்ந்தவன் தாளிணையைச் சேர்வதுவு மெக்காலம் (56) 

சேர்க்கும் பொருள்மீதே சென்றிடுமோர் நாட்டத்தை
ஆர்க்கும் பணியில்லான் ஆட்சிசெயல் எக்காலம் (57)

ஆட்சி யவனாகும் ஆள்வன் அவனாவான்
மீட்சியெவ ரென்று மிரளாமை யெக்காலம் (58)

மிரண்டு பயங்கொண்டு மீண்டும் பிறவா
வரம்வந் தெனையுந்தான் வாழ்வித்தல் எக்காலம்? (59)

 வித்தாக்கி யுண்டாக்கி மேனிலையைத் தந்தோனும்
செத்த தறிந்து திருவிழத்த லெக்காலம் (60)

இழந்தேன்நான் யாவும் எனப்புலம்பி வீழா
துழைத்து முதல்வன்தாள் உற்றிடுதல் எக்காலம்? (61)

உற்றாளும் மாடும் மனையும் மறைகின்ற
உற்றறியா உண்மை உணர்வது மெக்காலம் (62)


தூயோனை நெஞ்சத்துத் தூணில் நிறுத்தியான்
வாயாரப் போற்றி வணங்கிடுதல் எக்காலம் (63)

வணங்கா திருப்போரை வாழ்விக்கு மீசன்
இணங்கா குறைபொறுத்து ஏற்பதுவு மெக்காலம் ( 64)

ஏற்பான் எனையிறைவன் ஏற்றிடுவேன் என்குறைகள்
தீர்ப்பான் அவனைத் தெரிந்துகொளல் எக்காலம் (65)

கொளுமிந்தச் செல்வம் குறையுநிலை யோர்ந்து
தெளிவுற்ற சிந்தையில் சேர்வதுவு மெக்காலம் (66)

சேர்க்கைகளை நம்பிச் செலவழிக்கும் வையத்தீர்
ஊர்க்குமுனம் நாதனைநீர் ஒப்பிடுதல் எக்காலம் ( 67)

ஒப்பி யவன்பாதம் உச்சிதனிற் கொள்ளாமல்
பிச்சியென வாழ்வழித்துப் பின்னிவர லெக்காலம் ( 68)

பிணைக்கும் அழுக்குகளைப் பேர்க்க முதல்வன்
துணைக்கு விழிமுன்னம் தோன்றுவதும் எக்காலம்?( 69)

தோன்றிய யாவும் தொடக்கறுதல் கண்டறிந்தும்
ஊன்றி யவன்பாதம் ஊர்வதுவு மெக்காலம் (70 )

ஊரும் விலங்கோ டுலக உயிர்யாவும்
சாரும் தலைவனையான் சந்திப்ப தெக்காலம்?(71)

சந்தித்த லீசன் சடைத்தலை யென்றாகி
நிந்தித்த லின்றி நிலைபெறுத லெக்காலம் (72)

 நிலையாமை என்பதன் நிச்சயம் கண்டிங் 
கலையாமல் நெஞ்சம் அமர்ந்திருத்தல் எக்காலம்?(73)

அமரும் பராசக்தி அருட்பாதத் தையான்
அமரன்என் றாகி அரவணைத்த லெக்காலம் (74)

அரவணைக்கும் அன்னையவள் அன்பனெனைக் கண்டு
சுரக்கும் திருப்பாற் சுவைதருத லெக்காலம்(75)

சுவையும் ஊறோசை சுற்றுமிவ் வையக்
கவையில் நுழையாமல் கனிதுவு மெக்காலம்(76)

கனிந்த மனத்தில் கடவுளின் பாதம்
நினைந்தெனது வாழ்க்கையை நீட்டுவது மெக்காலம் (77)

நீட்டிப் படுத்தார் நிலையழியக் கண்டாலும்
ஆட்டுவான் ஆட்டத்தில் ஆகிடுத லெக்காலம்(78)

ஆகும் நிலைமாற்றம் அத்தனையும் வாழ்வினிலே
மேகம் எனவிறையை மேவிடுதல் எக்காலம்?(79)

மேவும் உயிர்க்கூட்டம் மேலான ஈசனருள்
யாவும் எனவுணர்ந் தாடிடுவ தெக்காலம் (80)

ஆடும் வறுமை அழிக்கும் பொருளாசை
நாடும் இறைவுணர்ந்து நன்மையுறல் எக்காலம்(81)

நன்மையும் தீமையும் நாடாமல் நத்துவர்
உண்மை யுணர்ந்தவர் ஊர்ப்புகுத லெக்காலம் (82)

 ஊர்ப்புகும் முன்னம் உயரிறைவன் எண்ணத்தின் 
வேர்பிடித்து மாந்தர்கள் வெற்றிபெறல் எக்காலம்? (83)

 பெறவாம் அருளாசி பெற்றிந்த வாழ்வில்
திறலாய்ச் சிவனருளிற் றோய்வதுவு மெக்காலம் (84)

தோய்கின்ற ஆன்மீகத் தொல்லியலில் நம்மிச்சை
மாய்கின்ற தென்கின்ற மாயம்வரல் எக்காலம் (85)

மாய மறுத்து மயக்கறுத்து ஈசனடி
தோய விழுந்து துணைபெறுவ தெக்காலம் (86)

பெறுகின்ற வாய்ப்பிலெலாம் பேரிறைவன் நாமம்
சிறப்புடனே சொல்லிச் செபித்திருத்தல் எக்காலம் (87)

 பித்தாகிச் சோராமல் பேசா தொழிந்துநான்
வித்தாகி முன்னம் வினையறுத்த லெக்காலம்(88)

வினைவழியே வாழ்க்கை விளையாடும்! ஆங்கே
எனையாள வெந்தலையன் ஈண்டிருத்தல் எக்காலம் (89)

 ஈன்றாளின் பாசப் பிணைப்பும் சிவனருளாய்
வேண்டுவாம் மேன்மை விளங்குவது மெக்காலம் (90)

விளக்கமிலா ஞான வினாவறியத் தெய்வம்
துளக்க வருதல் தொடங்குவது மெக்காலம்(91)

தொடக்கமாய் நிற்பான் துலக்கமு மாவான்
விடைகொள வேண்டி விழைந்திருத்த லெக்காலம் (92)

விழைகின்ற யாவையுமே விந்தை அவற்றை
அழைக்கின்ற ஈசன் அளிப்பதுவு மெக்காலம்(93)

அளிப்பான் அழிப்பான் அலைப்பான் அருள்வான்
களிப்போடு நானவனைக் கண்டிணைத லெக்காலம் (94)


கண்டிடாத மாயங்கள் காட்டி உயிரீர்க்கும்
கொண்டலைத் தெய்வத்தைக் கொண்டிடுதல் எக்காலம்(95)

கொண்டாளும் சேராளே கொள்வதும் சேராவே
உண்டீசன் ஞானம் உயிர்ப்பதுவு மெக்காலம் ( 96)

உயிர்வந்த காரணமே உன்னதமாந் நாம
செயஞ்சொல்ல வென்று செழித்திருத்த லெக்காலம் (97)

 செழிக்கின்ற வையச் சிறப்பொழிய கண்டோம்
விழித்தீசன் மேனி விதிர்ப்புறுத லெக்காலம் (98)

விதிவிதிர்த் தீசன் விளையாடல் கண்டு 
மதிமயங்கி பக்தியினை மந்திவரல் எக்காலம் (99)

வரவாய்ச் சிவனருளில் வாய்த்தயிச் சோலை
உரமுஞ் சிவனென்றே உலகறிவ தெக்காலம் ( 100)




                      நூற்பயன்

இரட்டைப் புலவர்கள் ஈண்டளித்த பாடற் 
றிரட்டை உணர்ந்தால் தெளிவர் - விரவி
இறைவன் பதம்காண்பர் இவ்வுலக வாழ்வின் 
நிறத்தை நிலையை நினைத்து!