பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

14 Nov 2022

#பாட்டியற்றுக_தொகுப்பு - 04 (புதியது)

 


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:04 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                                     நன்றி.!

                            *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--04

         (வெள்ளொத்தாழிசை)

1. கவிஞர் Sachithananthan Kuganathan 

ஒருவேளை உண்ண உணவற்ற ஏழை                 

கருவூலம் கொள்ளாத காசுடையோ னென்று

பெருந்தெற்றுக் கில்லைப் பிரிவு

கருப்பா வெளுப்பா கலப்பா  கலவாப்

பெருமானா  வீரனா பேடியா வென்று 

பெருந்தொற்றுக் கில்லைப் பிரிவு

கருவினை ஈன்றெடுக்கக் காத்திருக்குந் தாயோ 

கருவோ குமரியோ  காளையோ என்று

பெருந்தொற்றுக் கில்லைப் பிரிவு.

2.கவிஞர் Kannan Balanethiram Kannan 

கசக்குந் துயரைக் களைந்த மனத்தைப்

பிசகு மியல்பால் பிழையில் வருத்தி

விசனந் தருங்கால் விலகு

வசன முதிர்த்தவர் வாழ்க்கையில் தன்சொல்  

கசடறக் சற்றும் கடைப்பிடிக் காமல்  

விசனந் தருங்கால் விலகு

குசலம் வினவுங் குணவான் பிழன்று 

வசைமொழி பொங்கிட வன்மம் மிகுந்து

விசனந் தருங்கால் விலகு

3. கவிஞர் Swarna Sabarikumar 

அன்னைத் தமிழின் அடிவணங்கி வேண்டினேன்

இன்னரு ளாலே இடரினைத் தீர்த்தவள்

என்னுள் நிறைவாய் இருப்பு.

கன்னல் சுவையாய்க் கருத்தில் உறைபவள் 

தென்றல் இதமாய்த்  தெவிட்டா தணைப்பவள்

என்னுள் நிறைவாய் இருப்பு.

பின்னலின் கோவையாய்ப் பீறிட் டெழுஞ்சொல்

மின்னலின் வேகத்தில் மீட்டித் தருபவள்

என்னுள் நிறைவாய் இருப்பு.

4. கவிஞர் Anbudan Ananthi 

அடியும் முடியும் அறிய இயலா 

அவனின் புகழை அவனின் அருளை

அகமும் புறமும் நினை

முன்னரும் பின்னரும் மூலமும் ஆனவன்

தன்னை உணரத் தடைகள் விலக

அகமும் புறமும் நினை

அறியாமை ஓங்க அறியாது செய்த

பிழைகள் பொறுத்துப் பிரியாமல் காக்க

அகமும் புறமும் நினை.

5. கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

வறுமையில் வாழ்ந்திடும் மாந்தர் நலனில்

சிறுமை யகற்றிடத் திக்கெட்டும் தேடிச்

சிறந்ததைத் தானமாகச் செய்

குருதிக் கொடைதான் குணத்தில் சிறப்பு

பெரும்பிணி நீக்கிடப் பேருதவி யாகச்

சிறந்ததைத் தானமாகச் செய்

கல்வியைக் கற்றிடக் கைப்பற்றி நின்றிடும்

செல்வம் குறைந்தோர் செழுமையாய்க் கற்றிட

சிறந்ததைத் தானமாகச் செய்

6.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

தவழும் முகிலாள் தரைவீழ் மழைபோல்

தவறா தெனைநீ தழுவிப் புணர்ந்தால்

உவகை நிறையும் உளம்

கவலையி லாழ்ந்த கடும்பிணி யுற்றோன்

அவலம் ஒழிக்கும் அருமருந்து பெற்றால்

உவகை நிறையும் உளம் 

சிவந்த இதழினில் செந்தமிழ் சிந்தும்

அவளது கூடல் அகலா திருந்தால்

உவகை நிறையும் உளம்

7.கவிஞர் Umaipalan Thiyagaraja 

பிச்சைக்குக் கையையேந்திப் பீடிழக்க நேரினும்

இச்சிறிய வாழ்வில் இருள்தான் நிறைந்தாலும்

கற்றகல்வி கைவிடாது காண்!

பெற்றெடுத்த பிள்ளைகளால் பேர்கெட நேரினும்

சுற்றமெல்லாம் தூரநிற்கச் சோக முறைந்தாலும் 

கற்றகல்வி கைவிடாது காண்!

மூப்பெய்தி மூச்சிழுத்து மூலையில் வீழ்ந்தாலும்

காப்பாற்ற யாருமற்றுக் கண்ணீர் சொரிந்தாலும்

கற்றகல்வி கைவிடாது காண்!

                              ★★★

பாட்டியற்றுக_தொகுப்பு - 03 (புதியது)

 


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:03 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                       நன்றி.!

           *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--03

              (நேரிசைவெண்பா)

1. கவிஞர் Sachithananthan Kuganathan 

ஆடிவெயில் கண்பொரிய ஆற்றாது கூடத்தில் 

வாடிப்போய் வீழ்ந்து மயக்குற்றேன் - ஆடியது

முன்கதவு வீடெங்கும் முற்றத் திருந்தகுளிர்

தென்றல் தவழ்ந்த திறம்.

2.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

பாட்டெழுதப் பற்றினோம்

பாவலர் பாதத்தை!

மீட்டெம்மைக் காக்கின்றார் மேன்மையாக! - ஏட்டினில்

யாமியற்றும் பாக்களை யாவ ருமறியத்

தாமிங்குச் சாற்றிடுவார் சான்று

3.கவிஞர் Anbudan Ananthi 

சொல்லுக்குள் நிற்கும் சுமைகள் கடப்பவர்

வெல்லும் வழியின் வெளிச்சத்தில் - நில்லாது

செல்லும் அறவழியும் சொல்லும் எவர்க்குமிங்குக்

கல்வியே கேடயக் காப்பு.

4.கவிஞர் Umaipalan Thiyagaraja 

கூட்டைப் பிரிந்தழும் குஞ்சுகளைப் போல்தம்தாய்

நாட்டைப் பிரிந்துழல்வார் நாள்தோறும் - மீட்டணைத்துத்

தோழமையாய் நின்றொரு தோள்கொடுப்பார் இல்லையெனில்

பாழாய்ப்போம் என்றுமிந்தப் பார்!

5.கவிஞர் Swarna Sabarikumar 

மலரத் துடித்திடும் மல்லிகைச் செண்டு

புலர்ந்த தினமும்  பொலிவாம்- அலர்ந்த

நறுமுகை வாசனை நாசி நுழைந்து 

வருடும்  மனத்தின் வரம்.

6.கவிஞர் Balanethiram Kannan 

ஆந்தைக்குக் கேட்குமாம் அச்சிற் றெலிச்சத்தம்   

மாந்தர்க்குக் கேட்காது மைந்தர்காள்! - ஈந்தநல் 

மாற்றுத் திறனனைத்தும் மண்ணில் மகத்துவம் 

ஏற்பிலை போட்டி இயல்பு

7.கவிஞர் CA Manimaran Kathiresan 

மகளவளின் பாசம் மகத்துவம் பேசும்

அகவை முதிர்ந்தும் அணைக்கும் - அகவை

புதிதாய்த் தொடங்கும் புதுவுறவை ஈன்றும்

உதிராதே தந்தை உறவு 

8.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

கற்றுயர்ந்த மேன்மக்கள் கல்லாத மாந்தர்க்கும்

நற்றுணையாய் உற்றுழி நல்குவர் - நற்பதமாய்ச்

சேற்றில் விதைத்தவை செம்பயி ராய்விளையும்

மாற்றந் தருமாம் மழை

9. கவிஞர் Thilagavathi Ramesh 

வண்ண வனப்புடனே வானுயர்ந்த வாமனவன்

வெண்ணெய் திருடுவதில் வென்றிடுவான்-கண்ணனவன்

கோலத்தைக் கண்டிங்கு கோதையவள் கொஞ்சிடவே

காலமெல்லாம் காத்திருக்கும் கண்

                                 ★★★


31 Oct 2022

பாட்டியற்றுக_தொகுப்பு - 02 (புதியது )



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:02 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                       நன்றி.!

           *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--02 

              (குறள்வெண்பா)

1.கவிஞர் Sachithananthan Kuganathan 

எண்ணத்திற் சீர்கள் எழுந்து நடைபயில

வெண்பா வருமே விரைந்து

2.கவிஞர் Swarna Sabarikumar 

இறைவன் அருளால் எடுத்த பிறப்பில் 

மறைபொருள் காண்பதே மாண்பு.

3.கவிஞர் Anbudan Ananthi 

முத்தமிழே மூலமே மூத்தவளே உன்னாலே

தித்திக்கும் எந்தன் பிறப்பு.

4.கவிஞர் Umaipalan Thiyagaraja 

இன்பத் தமிழ்பருக ஈர்த்தணைத்தாய் சோலைக்கே

அன்னைத் தமிழே அழகு

5.கவிஞர் Balanethiram Kannan 

கடலிலே மூழ்கையில் கைகொடுப் பாரும் 

கடனுக்கு நீட்டிடார் கை

6.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

பாட்டுக்குப் பாரதிபோல் பைந்தமிழ்ச் சோலையாம்

காட்டாற்று வெள்ளத்தில் கல்

7.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

முப்பால் நெறிநின்று மூவுலகும் ஆழ்ந்தறிந்தால்

ஒப்பிலா வாழ்க்கை உயிர்க்கு

8.கவிஞர் CA Manimaran Kathiresan 

தேவைக்காய் வந்திடும் தேடுபொருள் யாவையும் 

சேவைக்காய்க்  கொள்ளற் சிறப்பு

9.கவிஞர் திலகவதி

அன்பென்ற சொல்லால் அகிலமும் கட்டுண்டு 

நன்றென்று நாட்டப் படும்

                                ★★★


#பாட்டியற்றுக_தொகுப்பு - 01 (புதியது )



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:01 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

    இந்த ஆண்டின் முதல் பயிற்சியின் தொகுப்பு இது. 

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                       நன்றி.!

           *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--01

       (குறள்வெண் செந்துறை)

1. கவிஞர் Anbudan Ananthi 

சிவமே சீவனே சிந்தையில் நின்றவா

தவமே புரிவேன் தருவாய் அருளே!

2.கவிஞர் Sachithananthan Kuganathan 

வேழ முகத்து விநாயகா வுன்பதந்

தாழப் பணிந்தேன் தமிழினிற் பாடவே!

3.கவிஞர் Umaipalan Thiyagaraja 

உமையொரு பாகம் உடையாய் நீயே

அமைதி தருவாய் அகிலத் தரனே!

4.கவிஞர் Swarna Sabarikumar 

சங்கரன் மனமகிழ் சங்கரி உன்னருள்

எங்களை அரண்போல் என்றுமே காக்கவே!

5.கவிஞர் CA Manimaran Kathiresan 

வேலுடன் நின்றவா வேதனை அகற்றவா

வேலும் மயிலும் வேண்டும் துணையே!

6.கவிஞர் Kannan Balanethiram 

மனத்திலே திடமும் மகிழ்வுட னுளமும்

தினமுமே தருவாய் தில்லையம் பலனே

7.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

வினையின் பயனால் விளைந்தேன் முருகா

வினைகள் ஒழித்துயர் வீடளித் தேற்கவே

8.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

ஏறு முகமாய் ஏற்றி விடவே

ஆறு முகமே அருளைத் தருகவே

9.கவிஞர் திலகவதி

மாயக் கண்ணனே மரகத வண்ணனே

காயம் பொய்யே காத்திடு நீயே

                                ★★★