அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.!
பாட்டியற்றுக:03 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--03
(நேரிசைவெண்பா)
1. கவிஞர் Sachithananthan Kuganathan
ஆடிவெயில் கண்பொரிய ஆற்றாது கூடத்தில்
வாடிப்போய் வீழ்ந்து மயக்குற்றேன் - ஆடியது
முன்கதவு வீடெங்கும் முற்றத் திருந்தகுளிர்
தென்றல் தவழ்ந்த திறம்.
★
2.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி
பாட்டெழுதப் பற்றினோம்
பாவலர் பாதத்தை!
மீட்டெம்மைக் காக்கின்றார் மேன்மையாக! - ஏட்டினில்
யாமியற்றும் பாக்களை யாவ ருமறியத்
தாமிங்குச் சாற்றிடுவார் சான்று
★
3.கவிஞர் Anbudan Ananthi
சொல்லுக்குள் நிற்கும் சுமைகள் கடப்பவர்
வெல்லும் வழியின் வெளிச்சத்தில் - நில்லாது
செல்லும் அறவழியும் சொல்லும் எவர்க்குமிங்குக்
கல்வியே கேடயக் காப்பு.
★
4.கவிஞர் Umaipalan Thiyagaraja
கூட்டைப் பிரிந்தழும் குஞ்சுகளைப் போல்தம்தாய்
நாட்டைப் பிரிந்துழல்வார் நாள்தோறும் - மீட்டணைத்துத்
தோழமையாய் நின்றொரு தோள்கொடுப்பார் இல்லையெனில்
பாழாய்ப்போம் என்றுமிந்தப் பார்!
★
5.கவிஞர் Swarna Sabarikumar
மலரத் துடித்திடும் மல்லிகைச் செண்டு
புலர்ந்த தினமும் பொலிவாம்- அலர்ந்த
நறுமுகை வாசனை நாசி நுழைந்து
வருடும் மனத்தின் வரம்.
★
6.கவிஞர் Balanethiram Kannan
ஆந்தைக்குக் கேட்குமாம் அச்சிற் றெலிச்சத்தம்
மாந்தர்க்குக் கேட்காது மைந்தர்காள்! - ஈந்தநல்
மாற்றுத் திறனனைத்தும் மண்ணில் மகத்துவம்
ஏற்பிலை போட்டி இயல்பு
★
7.கவிஞர் CA Manimaran Kathiresan
மகளவளின் பாசம் மகத்துவம் பேசும்
அகவை முதிர்ந்தும் அணைக்கும் - அகவை
புதிதாய்த் தொடங்கும் புதுவுறவை ஈன்றும்
உதிராதே தந்தை உறவு
★
8.கவிஞர் க.சந்தோஷ்குமார்
கற்றுயர்ந்த மேன்மக்கள் கல்லாத மாந்தர்க்கும்
நற்றுணையாய் உற்றுழி நல்குவர் - நற்பதமாய்ச்
சேற்றில் விதைத்தவை செம்பயி ராய்விளையும்
மாற்றந் தருமாம் மழை
★
9. கவிஞர் Thilagavathi Ramesh
வண்ண வனப்புடனே வானுயர்ந்த வாமனவன்
வெண்ணெய் திருடுவதில் வென்றிடுவான்-கண்ணனவன்
கோலத்தைக் கண்டிங்கு கோதையவள் கொஞ்சிடவே
காலமெல்லாம் காத்திருக்கும் கண்
★★★
No comments:
Post a Comment