பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 May 2016

சிந்துபாடுக‬- 9 ( காவடிச் சிந்து 3 )



அன்பு நண்பர்களே! கவிஞர்களே! 

புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:"#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். 
சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.
சிந்து பாடுக - 9
******************

(காவடிச் சிந்து) 3
இன்னுந்த யக்கமேன் முல்லையே - என்றும்
இன்றமிழ் வீழ்வது மில்லையே - அதை
எள்ளுவோர் தாழுவர் ஒல்லையே - நாளும்
இனிதேயது தமிழேபடி வளமேபெற அதுவேவழி 
ஏற்றிப்பு கழ்ந்திடு கிள்ளையே - தூற்றும்
எத்தரால் என்றுமே தொல்லையே !

துன்பங்கொ டுப்பதா லென்றுமே - நந்தம்
தூயத மிழ்மொழி கன்றுமே - வீரத்
தொண்டர்க ளெல்லோரும் சென்றுமே - மிகு
துணிவோடிவன் அயலார்மொழி தனையேபெரி தெனவேயுரை
சூதரை ஒன்றிநாம் வென்றுமே - நம்
சோர்வினை ஓட்டுவோம் என்றுமே!
பாவலர் மா.வரதராசன்
கருத்தூன்றுக :
மேற்கண்ட பாடல் வகை "காவடிச் சிந்து" மற்றொரு வகையாகும். காவடிச் சிந்தில் பல வகைகள் உள்ளன. இது நம் கணக்கில் மூன்றாம் வகையாகக் கொள்வோம். (உங்கள் தனிப்பாடல்களில் எண் போட வேண்டியதில்லை. காவடிச் சிந்து என்று மட்டும் போட வேண்டும்.)
அண்ணாமலை ரெட்டியாரின்,
"வண்ணத்தி னைமாவைத் தெளளியே... என்ற பாடல் இவ்வகையே.
காவடிச் சிந்தின் முதல் வகையைச் சிறிது ஒத்த ஓசையையுடையது.
மேற்கண்ட பாடலில், 24 சீர்களும்,
ஒவ்வொரு சீரிலும் மூன்று எழுத்துகளும் (ஒற்று நீக்கி) உள்ளன.( இ னு த), (ய க. மே) இவ்வாறு பிற சீல்களும் காண்க
★முடுகியல் தவிர்ந்த மற்ற சீர்கள் கண்டிப்பாகக் குறிலிணைச் சீர்களால் தொடங்கக் கூடாது.
★முடுகியல் சந்தம் "தனதானன "
தனதந்தன., தத்தத்தன / இவற்றில் ஒன்றை மட்டுமே கொண்டிருத்தல் நன்று.
★ முடுகியலில் பயன்படும் சந்தத்தில் ஒற்று அதே இன ஒற்றாகவே வரவேண்டும். ஒற்று மிகும் சீர்களால் சிதையுமாறு அமைதல் கூடாது.
4,8,14, 20ஆம் சீர்கள் தனிச்சீர்களாக வரவேண்டும். அவை ஓரசைச் சீர்களாக அல்லது தேமாச் சீராக மட்டுமே வரவேண்டும்.
பொது இலக்கணம் :
மேற்கண்ட பாடலின்படி...
* ஓரடிக்கு மூன்றெழுத்துச் சீர்கள் 24 வரவேண்டும்
* இன்னுந்த ...என்பது முதல் தொல்லையே...என்பது வரை ஓரடி. துன்பங்கொ.. என்பது முதல், என்றுமே...என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும். (இன்னும், துன்பம்) 
* 1,5,9,13,17,21 ஆம் சீரகள் மோனையால் இணையும். சான்று பாடலில் (இ,இ,எ,இ,எ,ஏ)
3,7,11,19,23 ஆம் சீர்கள் ஒத்த ஓசையுடைய "இயைபாக "வரவேண்டும். (சான்று பாடலில் காண்க)
இந்த இலக்கணப்படி வருவது "காவடிச் சிந்து" ஆகும்.
★பாடிப் பார்த்து விளங்கிக் கொள்ள நம் "பைந்தமிழ்ச் சோலை" கட்செவிக் குழுவில் இந்தச் சந்தத்தில் பாடிய என் பாடலைக் கேட்கவும். அதைப் பழகிக் கொள்ளவும். சந்தத்தில் பாடினால் தான் காவடிச் சிந்து வகை விளங்கும். எழுதவரும்.
இவ்வகையான பாடல் ஒன்றை விரும்பிய பொருளமைய வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Coment) மட்டும் பதியவும்.
ஒருவர் ஒரு பாடலை மட்டுமே பதியவும். மற்ற பாடல்களைச் செம்மைப்படுத்த நேரமொதுக்க உதவியாகஇருக்கும் !

No comments: