பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

10 Feb 2016

பாட்டியற்றுக - 21


நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 21" இதோ.!
"இப்பகுதியில் கொடுக்கப்படும் இலக்கணக் குறிப்புகள், புதிதாகக் கற்பவர்கள் அஞ்சி ஒதுங்காமல், குழப்பமடையாவண்ணம் எளிதில் கற்கும் விதத்தில் (பாட்டியற்றும் வகையில்) தேவையானவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன. 
மேல்விளக்கம் தேவைப்படுவோர்
முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்."
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***

பாட்டியற்றுக - 21
வஞ்சித் தாழிசை
******************

மயக்கிடும் கண்களும்
முயக்கிடும் தோள்களும்
தயங்கிடும் சொல்லுடன்
உயர்வுளப் பாவையே!

இலையெனும் இடையொடு
சிலையென வடிவொடு
கலையெழில் அழகொடு
நிலைபெறும் பாவையே!

செறிவுளக் கூந்தலும்
தெறிவொளிர் பற்களும்
நெறிசெலுங் கால்களும்
அறிவுளப் பாவையே!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***
கருத்தூன்றுக.:
மேற்கண்ட பாடல் வஞ்சிப் பாவின் இனமான "வஞ்சித் தாழிசை "ஆகும். 
இருசீரடி நான்கு கொண்டு, ஒருபொருண்மேல் மூன்றடுக்கி வருவது, வஞ்சித் தாழிசையாகும்.
ஒரு பொருள்மேல் ஒரு பாடல் தனித்து வருவது "வஞ்சித் துறை "யாகும். 
"குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித்
துறையொரு வாது தனிவரு மாய்விடின்...(யா. காரிகை)
இருசீரடி எனப் பொதுவில் உரைத்தமையால் சீர்கள் அமைப்பில் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் அளவொத்து இருத்தல் சிறப்பு. (சான்று பாடலைப் பார்க்கவும்)
வஞ்சியுரிச்சீர் வரவேண்டும் என்ற கட்டாயமில்லை. (முன்னோர் சான்றுகளின் படி)
பொது இலக்கணம்
************************
* இருசீர்கள் கொண்டதாய்,
*நான்கு அடிகள் கொண்டு,
* நான்டிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,
★ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவது,(கட்டாயம்) 
"வஞ்சித் தாழிசை" ஆகும்.
இவ்வகையான ஒரு பாடலை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில்(comment) மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டுமே அனுப்பவும். பயிற்சிக்கு நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★

No comments: