பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

4 Mar 2016

‎பாட்டியற்றுக 23 இன் தொகுப்பு‬


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 23 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 23
மருட்பா
*********

(செவியறிவுறூஉ)
1. கவிஞர் விவேக்பாரதி
வாயுரை யூட்ட வளமாக நாம்வாழத் 
தாயுளத் தாவும் தரும்நனிப் பால்போல் 
உளம்கொளும் மாணவரே ! ஊருக்கு ளுங்கள் 
அளப்பறிய வீரம் அதுகாட்ட வாகனத்தில் 
வேகமாய்ச் செல்லல் விடுமின் 
தேகம் காக்கத் தேவைமித வேகமே!

2. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
உடலில் உயிருமே ஒன்றி யொடுங்கிக்
கடமையுடன் நாமும் கடவுளையே எண்ணிநோக்கி
ஐம்புலன்கள் நன்றாய் அடங்கிச் சிவமுடனே 
நம்மை யிணைத்துத் தியான மிருந்தா
லுடலும் உயிருமே ஒழுங்கு
படலால் எளிதிலே பகவனும் அருள்வனே!

3. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
வேண்டுகின்ற மேலான வேளாண்மை பல்கியும் 
மாண்புடைய நன்னெறிகள் மானிடரால் மாறிட 
ஆண்டிடலாம் நாட்டினை ஆக்கம் மிகுந்திடவும் 
யாண்டுமிதைச் சொல்லிட யானும் நினைந்திட 
உழைப்பவர் தழைத்தே உன்னதப் 
பிழைப்பாய் நின்றிடப் பிசகா வாழ்வே !

4. கவிஞர் கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி
குன்றில் அமர்ந்திட்டான் கோவணன் ஆகிட்டான்
மன்றில் மறந்திட்டான் மாயன் மருகனவன்
ஆடு மயிலேறி அங்கையில் வேல்தாங்கிப்
பீடு பலதீயப் பார்க்கலுறும் வேலோன்
அடிதொழ மனிதா அகமகிழ்
முடியென ஒளிர்வாய் முத்துச் சுடரே !

5. கவிஞர் அர.விவேகானந்தன்
மனமது வீழ்ந்திடும் மாய்த்திடும் நாவால்
இனமது மாள இயம்பிட லேனோ?
கனியெனச் சொல்லைக் கடத்தினுள் ஏற்றி
இனிதா யுரைப்பின் இளமையும் கூடும்
தேவை யறிந்தே உரைத்து
நாவை யடக்கி நலங்கூட் டுவாயே!

6. கவிஞர் இரா.கி.இராஜேந்திரன்
எம்மனோர் என்றும் எழுதுவது நல்வழியில்
செம்மையும் சீரும் சிறப்பும் நிறைந்துவாழ்வில்
பெம்மான் திருவடி பெற்றுத் துதித்தலும்
வெம்மைக் குணத்தை வெறுத்து வணங்கினால்
தாழ்வில் வறுமை தவிர்த்து
வாழ்வில் நலமும் வளமும் பெறுவமே!

7. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
இழுப்பதற் கெண்ணி இலவசம் தந்து
கழுத்தை அறுக்கும் கயவர்தம் ஆட்சி
இழுக்காம் அறிவீர் இதனைத் தவிர்க்கும்
பழுதிலா வாட்சியே பாரிற் சிறந்ததாம்
வாக்களிப் பதுநல் வாழ்வினை
ஆக்கவே தெளிவீர் அறிவினைப் பெற்றே!

8. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
செவியுண வொன்றிருக்கும் செய்தியதைக் கேளீர் 
அவியுண வாகிடுமாம் ஆன்றோர்கள் சொல்வார் 
தவறாமல் ஆன்மா தழைத்திடுமே ஓங்கத்
தவத்தினில் ஏற்றிடும் தற்போதம் நீக்கிடும்
மேன்மை யடைய மொழிந்த
இன்சொல் அதனைக் குறள்வழி காணே!

9. கவிஞர் பொன்.பசுபதி
பெருவிழைவு கொண்டே பெருஞ்செல்வம் ஈட்டத்
தருக்கராய்த் தோன்றித் தணியா நெருப்பாய்
இதயத்தை மாற்றி இடர்பிறர்க்குச் செய்தே
புதைக்குழி தன்னில் புதைந்துபோ காமல்
அளவோ டெதையு(ம்) அடைதல்
வளஞ்சே(ர்) அமைதியை
வழங்குமென் றோர்வமே.

10. கவிஞர் மணிமேகலை குப்புசாமி
அடிக்கின்றாய் என்றே அனைவரும் ஏச
நடிக்கின்றாய் வெய்யிலே!நீ நல்லை! குடிக்கின்றோம்
நுங்கும் இளநீரும்! நோயளிக்கா! நல்லியற்கை
தங்கு பலா,மா தழைத்திட வந்த
சுவைமிகு கோடை தொடர
அவையுறு 'கோ'வாய் அமர்ந்துளாய் நீயே!

11. கவிஞர் கணேசன் ராமசாமி
பள்ளிச் சிறுமிக்குப் பாலியல் தொல்லைகள் 
உள்ளிருக்கு மாசானே யுன்னாலே நேருவதோ
கள்ளமில்லாப் பெண்குழந்தை கற்கவரும் பள்ளியிலே
கள்ளமுட னுன்வரவு காவலுக் கோனாயே
குருகுலம் திளைக்க கோவில்
உருப்பெறுங் குருவு னுத்தம குணத்தே!

12. கவிஞர் வள்ளிமுத்து
அரசே! அகிலமும் ஆளுவதுன் வெற்றி
முரசே! பழுதிலாச் சந்ததி வாழப்
பயனுடைச் சட்டம் பலவகைத் திட்டம்
புயலென வகுத்திடில் போற்று முலகு
சிந்தை தவறி மதுக்கடை
திறந்தால் தீராப் பழிவந்து சேருமே..!

13. கவிஞர் பரமநாதன் கணேசு
கோடி பணமீட்டக் கொல்லும் கருவிகள் 
தேடிப் பொழுதெலாம் சேர்த்ததை விற்றுச்
சுடுகாடாய்ப் பாரிதைச் சுட்டெரிக்க லாமோ?
விடடா வழியிதை வேண்டும் அறவாழ்வை
அள்ளிக் கொடுத்தே அணைத்துக்
கொள்ளக் கரம்தா கூடிக் களிக்கவே!

14. கவிஞர் வீ.சீராளன்
நற்பண்பெ வர்க்கும் நலங்கூட்டும் ! எவ்விடத்தும் 
பொற்புகழ் சேர்க்கும் பொறையாகும் - கற்புக் 
கணவனுக்கும் உண்டென்று காணுங்கால் நல்ல 
மணவாழ்க்கை மேவும் வளங்காணும் அல்லால்
பேரெழில் குன்றிப் பிறப்பின் 
சீரெழில் இழந்து சிதைந்தழி வோமே !

15. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
மூலமே மெய்யென்பேன் மற்றவை பொய்யென்பேன்
கோலமாய் மாறியே கொண்டாடும் மாயையாம்
வீட்டுக்குள் தூங்கும்நீ வீதியே வீடென்று
நோட்டத்திற் கொண்டுவா நான்கு சுவரின்றி
பொய்யெனும் திரையைப் போக்கி
மெய்நிலை உணர்ந்திடப் பொழுதெலாம் முயல்கவே!

16. கவிஞர் அஷ்பா அஸ்ரப் அலி
துன்பத்தி லாழ்ந்தோரைத் தூற்றாது தொய்விலா 
இன்பத்தில் வாழ்வோரே ஈவீர் இரப்பார்க்குப்
பாழும் வறுமையிலே பாடுபடு வோர்கண்டுத் 
தாழுமவர் வாழ்வொளிரத் தாழ்திறந் தாலிங்கு 
நிலையிலா வாழ்விலே நிலையெனத் 
தலைகாக் குமேயித் தருமமுஞ் செய்கவே !

17. கவிஞர் அழகர் சண்முகம்
கற்றதைக் கல்லார்க்குக் கற்றுக் கொடுத்துநீ
பெற்றதை இல்லாரும் பெற்றிடப் பங்கிட்டு
மற்றவர்துன் பத்தையும் மாற்றிட எண்ணியே
நற்பொரு ளீட்டிட நல்வழி நாடியுயர்
பற்பல நீதிநூல் படித்திடு
பொற்றமிழ்த் தாயைப் போற்றிப் பணிந்தே!

18. கவிஞர் குருநாதன் ரமணி
அன்றைய நாளில் அனைத்தும் குமிழ்விளக்கு
பின்னுறு நாளில் பெரிதாய்க் குழல்கள்
உருவில் சிறிதாய் ஒளிர்விளக் கும்போய்
இருமுனை யக்குமிழ் இன்று விளக்கென
மின்னாற் றல்பயன் குறைப்பீர்
என்றும் சூரியன் ஏற்றமின் னாற்றலே!

19. கவிஞர் தாமோதரன் கபாலி
இறைவுணர்வு காட்டும் இறைநிலை யேற்க
மறைப்பொருளும் சொல்லும் 
மகிமை - கறையில்லா
வாழ்வும் ஒளிரும் மனமும் ஒருநிலையாய்
வாழ்த்தும் நிறைந்த வளமே பெருகிடுமே.
ஆன்ம பலம்பெற லாகுமே
ஆன்றோர் வழங்கிய அருள்பெறக் கூடுமே!

20. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
முப்பால் அழகாய் மொழிந்த அருளுரை
அப்பால் விலக்கா தருகில் நிலைத்திட
முன்வருக, எல்லா மொழியிலும் மாற்றிடுக!
நன்னெறி யாமிது நம்மை உயர்த்திடும்
சிறப்புறு வாழ்வது சேர்ந்திட
மறவோம் பொதுமறை மறவோம் நாமே!

21. கவிஞர் காவியக்கவி இனியா
உழவரெம் கண்களென் றூரறியும் !ஆனாலும்
ஏழையவர் ! எண்ணத்தே ஈயுமனம் கொண்டவரை
எந்நாளும் போற்றிடுவாய்! ஏளனம் செய்யாமல்! 
தன்னலம் இல்லார் தழைத்தோங்கச் செய்வாய்
வறுமை நிலைதனை மாற்றிச்
சிறுமைகள் போக்கிச் சிறப்புறச் செய்கவே !

22. கவிஞர் ரமேஷ் மாதவன்
சிரத்தை நிறைந்திட்ட சீலர்கள் என்போர், 
மரத்தை வளர்த்து வனத்தினைக் காப்பவர்!
நாட்டினைக் காத்திடும் நல்ல செயலெது?
காட்டைப் பெருக்கியே காட்டுதல் அன்றோ!
இயற்கை செழிக்கும் இனிய
செயலால் உலகோர் செழிப்பைப் பெறுவரே!

No comments: