பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

16 Mar 2016

‪கடவுள்என்தோழன்‬ - 6




....தொடர்ச்சி..6

பொல்லாங்கும் வஞ்சனையும் பொய்யும் சூதும்
         புவிவாழ்வில் கீழ்மையிலே சேர்க்கும்.,மாறாய்
நல்லன்பும் மாந்தயினக் கனிவுங் கொண்டால்
         நாமிறந்த பின்னாலும் வாழ்வோம் மண்ணில்.
எல்லோர்க்கும் ஏற்றவிதம் வாழ்வை மாற்றி
         எல்லோர்க்கும் ஏற்றவிதம் அன்பைக் கூட்டி
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்
         என்றுரைத்தான் என்நண்பன் ...அசந்து போனேன்.!


படிக்கின்ற காலத்தில் பொறுப்பே யின்றிப்
         பயனின்றி வாழ்ந்திருந்த என்றன் நண்பன்
வெடிக்கின்ற சொல்வீசிப் பேசு கின்றான்
         வியப்பாகத் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தேன்
அடிதொடங்கி முடிவரையில் வெளிச்ச வட்டம்,
         அருள்பொழியும் திருவிழிகள், பலக ரங்கள்,
துடித்தபடி எழுந்தேன்நான் என்றன் கைகள்
         தொழுதபடி நின்றிருந்தேன்.,அவன்சி ரித்தான்.!

வாய்ப்பேச்சு வரவில்லை ஊமை யானேன்
         வந்திருக்கும் என்நண்பன் நண்ப னில்லை
தாய்ப்பிடியை விட்டகன்ற குழந்தை யானேன்
         தாளாத பாசத்தால் அணைத்தார் 'தெய்வம் '
நோய்ப்பிடியில் இருக்கையிலே அமுதம் தந்தால்
         நோய்நீங்கிப் போய்விடுமே அதுபோல் ஆனேன்.
சாய்ந்திட்ட எனைநிமிர்த்தி அமர வைத்தார்.
         சரியாக அவரைநான் பார்க்க லானேன்.,!

.....தொடரும் ....

No comments: