பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Mar 2016

கடவுள்என்தோழன்‬ 8


....தொடர்ச்சி : 8....

சுயநலமாய் வாழ்கின்றோர் பரம ஏழை
          தூய்மையிலா உள்ளத்தார் ஏழை.! நாட்டில்
கயமையினைப் புரிகின்ற கசடர் ஏழை
          கருணையிலா மனங்கொண்டோர் ஏழை! போதை
மயக்கத்தாற் பொறுப்பின்றி வாழ்வோர் ஏழை
          மானுடத்தைக் கொன்றொழிக்கும் மாக்கள் ஏழை
நயமாகப் பேசிப்பின் நட்பைக் கொல்லும்
          நரிக்குணத்தைக் கொண்டவர்கள் ஏழை தம்பீ!


பொதுநலத்தை விரும்புகின்ற மனித ராலே
          புவிப்பரப்பின் மக்களுக்கு நன்மை சேரும்
பொதுநலமாய்க் கடவுளரை வணங்கி வந்தால்
          போதுமென்ற அளவிற்கு வரங்கி டைக்கும்
பொதுநலத்தால் நாட்டிலுள்ள துன்பம் நீங்கிப்
          புகழடைந்து வாழ்வார்கள் மக்க ளெல்லாம்
பொதுநலமாய் நீயிருந்த தாலே உன்னைப்
          புரிந்துகொண்ட தோழனாக வந்தேன் " என்றார்.

(இன்னும் நீண்ட கவிதை. அதனால் சுருக்குகிறேன்)

"வெளிச்சமான ஒளிவட்டம் தலைக்குப் பின்னால் 
          வேண்டுவதேன்?" எனக்கேட்டேன்.அதற்குச் சொன்னார்
"துளியளவும் தீங்கின்றி வாழ்வோர் தம்மின்
          துன்பத்தைத் தீர்க்கின்ற அறிவு வட்டம்
சளைக்காமல் பொதுத்தொண்டு செய்வோர் தம்மின்
          தலைகாக்க உதவுகின்ற அருளின் வட்டம்
ஒளிர்கின்ற இவ்வட்டம் எல்லோ ருக்கும்
          உள்மனத்துள் ஒளிந்திருக்கும் உணர்வாய் " என்றார்!

"பலகைகள் உங்களுக்கேன்? " என்று கேட்டேன்
          பல்லுயிரின் கண்ணீரைத் துடைக்க" என்றார்.
"கலக்கத்தைக் கொடுக்காமல் விட்டு விட்டால்
          கண்ணீரே வராதன்றோ? " என்றேன்.,"தம்பீ
சுலபமாகக் கிடைத்து விட்டால் மக்க ளுக்குச் 
          சுகமொன்றே குறிக்கோளாய் மாறிப் போகும்
பலதடைகள் பட்டபின்பு கிடைக்கும் போது
          பக்குவத்தை அடைவார்கள் அதனால் " என்றார்!

....தொடரும் ....
(அடுத்த பதிவில் முடியும்)

No comments: